சசிகலா அதிமுகவில் இணைவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பேசியது நான் இல்லை: ஆடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம்...

சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சசிகலா அதிமுகவில் இணைவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பேசியது நான் இல்லை: ஆடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம்...

சசிகலா ஆதரவாளரான சக்திவேல் என்பவர் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சசிகலாவுக்கு ஆதரவாக தென் மண்டல நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அலைபேசியில் பேசி அதன் ஆடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது செல்லூர் ராஜுவுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரையின் அதிமுக முகமாக இருக்கும் தாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமா என சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு இந்த நிலை வெகு காலத்திற்கு தொடராது என்றும், சசிகலா அதிமுகவை தலைமை தாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பேசியுள்ளார். மேலும், ஜெயக்குமார் குறித்தும் ஒருமையில் அவதூறாக பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது..

இந்நிலையில், சமூக வலைதளங்களில் அதிமுக தலைமை, நிர்வாகிகளை பற்றி தாம் பேசியது போன்ற ஆடியோ முழுவதும் பொய்யானது என்றும், இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு காவல்துறையில் புகார் கொடுக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.