இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு.. விசாரணைக்கு அழைத்த நிலையில் உயிரை விட்ட கோபிநாத்!!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த  வழக்கில் தொடர்புடைய  வழக்கறிஞர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த  வழக்கு.. விசாரணைக்கு அழைத்த நிலையில் உயிரை விட்ட கோபிநாத்!!

சென்னையை அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு தூங்க செல்வதாக கூறி, வீட்டின் எதிரே உள்ள குடிசைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்தார். இதனை  பார்த்த அவரது தங்கை கொடுத்த தகவல் படி, சம்பவ இடத்துக்கு வந்த திருவேற்காடு போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் வழக்கு பதிந்து சுகேஷ் சந்திரா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் ராமாபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர்  மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத்துறை குற்றவாளியாக சேர்த்தனர். மேலும் அவரது ஜூனியர் என்பதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கோபிநாத் வீட்டிலும், 2017ல் அமலாக்கத்துறை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை, கோபிநாத் செல்போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு டெல்லி வருமாறு தகவல் கூறியதாகவும், இதனால் மன வேதனையில் இருந்த கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.