மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி....!

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி....!

கனியாமூர் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவி உயிரிழந்த வழக்கு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

ஜாமின் கேட்டு மனு:

இந்த நிலையில், பள்ளித் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11.00 மணிக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நான்காவது முறையாக, இந்த ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கியது.

அறிக்கை தாக்கல்:

அப்போது, மாணவி மர்ம மரணம் குறித்து, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் அறிக்கை மற்றும் சிபிசிஐடி போலீசார் இதுவரை மேற்கொண்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டது, இதன் மீதான விசாரணையை மதியம் 12:30 மணி வரை ஒத்திவைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

ஜாமின் மனு மீதான விசாரணை தள்ளுபடி:

இதனைத் தொடர்ந்து, ஜாமின் மனு மீதான விசாரணை மதியம் 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீதான ஜாமீன் விசாரணை முடிந்து இறுதி உத்தரவு இன்று மாலை வழங்கப்படும் என நேரம் குறிப்பிடாமல் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற  நீதிபதி சாந்தி அறிவித்தார், அதன்படி ஜாமின் மனு மீதான விசாரணை மதியம் 3-30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது, ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் மறு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, மாணவியின் இரண்டு உடல் கூறாய்வு மருத்துவ அறிக்கை வந்த பின்புதான் எப்ஐஆர் நகலை எங்களால் சமர்ப்பிக்க முடியும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 5நபர்கள்  ஜாமின் மனு மீதான விசாரணையை  தள்ளுபடி செய்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.