கார்த்திகை மாத பிறப்பையொட்டி, விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...
கார்த்திகை மாத பிறப்பையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சபரிமலைக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் செல்வார்கள். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் மிகவும் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இந்நிலையில் நடப்பாண்டு தரிசனத்துக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதியன்று திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கார்த்திகை 1-ம் தேதியான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, வழிபாடு நடத்தினர். இதேபோல், கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள ஜயப்பன் மற்றும் முருகனுக்கு கோவில்களில் குவிந்த ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதேபோன்று, நெல்லையில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். திண்டுக்கல்லில் உள்ள கோவில்களிலும் அதிகாலையிலேயே திரண்ட ஐயப்ப பக்தர்கள், நீர் நிலைகளில் புனித நீராடி, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.