ஏ.டி.எம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி...வைரலாகும் சிசிடிவி

ராமநாதபுரத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி...வைரலாகும் சிசிடிவி

ராமநாதபுரம் பாரதி நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்தை கடந்த 13-ம் தேதி இரவு, மர்ம நபர் ஒருவர் கடப்பாரையைக் கொண்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து வங்கிப் பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் ஏடிஎம் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கண்ணாடி அணிந்த ஒருவர் கையில் இரும்பு கடப்பாரையுடன் ஏடிஎம் மையத்திற்குள் செல்வதும், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்வது போன்றக் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக ராமநாதபுரம் பகுதியை சிவச்சந்திரன் என்பவரை கேணிக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.