உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...அரசுக்கு வலியுறுத்திய எல்.முருகன்!

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...அரசுக்கு வலியுறுத்திய எல்.முருகன்!

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வன்மையாக கண்டித்துள்ளார். 

NIA சோதனை:

திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் .முருகன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் தான் NIA சோதனை நடத்தப்படுகிறது. ஆனால்  NIA தவறுதலாக செயல்படுவதாக திமுக செய்தி தொடர்பாளர் அதன் மீது குற்றம் சாட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துகிறது திமுக:

NIA சோதனையானது  தேசத்தின் பாதுகாப்பு கருதி சரியான ஆதாரத்தின் அடிப்படையில் தான் நடைபெற்றது. ஆனால் NIA  சோதனையை ஓட்டு வங்கி அரசியலுக்காக திமுக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டினார்.

பூர்வாங்க பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவு:

தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ்  மருத்துவமனையின் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக தேசிய தலைவர் நட்டா கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பூர்வாங்க (தொடக்க பணிகள்)பணிகளில் 95 சதவீத பணிகள் மட்டும் நிறைவுற்றது என்ற கருத்து அடிப்படையில் தான் நட்டா தெரிவித்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்...காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்...!

அரசுக்கு வலியுறுத்தல்:

தொடர்ந்து, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு வாகனங்கள்  தாக்குதலுக்கு உள்ளாகிறது. இது போன்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.முருகன் அரசுக்கு வலியுறுத்தினார்.