சாவித்திரி கண்ணன் கைது...யாரை காப்பாற்றுவதற்காக? சீமான் கண்டனம்!

சாவித்திரி கண்ணன் கைது...யாரை காப்பாற்றுவதற்காக? சீமான் கண்டனம்!

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணனைக் கைதுசெய்வதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மாணவி உயிரிழப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கைது:

இந்த மாணவியின் மரணம் குறித்து செய்தி எழுதியதற்காக பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணனைக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்டனம் தெரிவிக்கும் சீமான்:

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்தி எழுதியதற்காக பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இக்கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகப் படுகொலை:

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட  குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத ஜனநாயகப் படுகொலை என சீமான் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி வழக்கில் புதிய திருப்பம்... 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

யாரைக் காப்பாற்றுவதற்காக?:

ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டுக் கருத்துப் பரப்புரை செய்து, போராடிய இளைஞர்களைக் கைது செய்து சிறையிலடைப்பதும், இதுகுறித்துப் பேசவிடாது ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிப்பதுமான திமுக அரசின் அதீதச்செயல்பாடுகள் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது என சீமான் குற்றம் சாட்டியுள்ளார். யாரைக் காப்பாற்றுவதற்காக? எல்லோரையும் பேசவிடாது, நெருக்கடி கொடுத்து இவ்வாறு முடக்குகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என விமர்சித்திருக்கிறார்.

தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்:

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்க வேண்டுமெனவும், கருத்து சுதந்திரத்திற்கெதிரான இக்கொடுங்கோல் போக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார் இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.