ஆலந்தூரில் மின்வெட்டு: திமுக அதிமுகவினரிடையே மோதல்!

ஆலந்தூரில் ஏற்படும் மின்வெட்டை சரிசெய்யக் கோரி மின்வாரிய அலுவலகம் வந்த அதிமுகவினை எதிர்த்து திமுகவினர் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் மின் வெட்டை சரி செய்ய கோரி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் உள்பட அதிமுகவினர் ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வந்தனர். உதவி செயற்பொறியாளர் கருப்பையாவை சந்தித்து தொடர் மின் வெட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கோரினார்.
அப்போது அங்கு வந்த திமுகவினர் அதிமுகவினரை எதிர்த்து கோஷம் போட்டனர். இதனால் திமுக- அதிமுகவினர் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது. இதனையொட்டி அப்பகுதி சிறிது நேரத்தில் பரபரப்பானது. திமுக- அதிமுக வாக்குவாதம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க:"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" தமிழிசை உறுதி!