அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்...! வைகோ அறிக்கை...!!

அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்...! வைகோ அறிக்கை...!!

அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் பாஜக சார்பில் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் துவங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிக்கொண்டிருந்த போது முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு பாடி கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த வைத்தார். இந்த சம்பவம் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், கர்நாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார்.  கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, கர்நாடக மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அத்தோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார். அங்குள்ள தமிழ் மக்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பாவும், அவரது பா.ஜ.க.வும் இழிவு செய்துள்ள போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, உலகின் மூத்த மொழிகளில் ஒன்று, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி என்னும் வரலாறு அண்ணாமலைக்கும், ஈஸ்வரப்பாவுக்கும் அறவே தெரியாது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தமிழ்மொழியை இழிவு செய்யும் வகையிலும், தமிழர் - கன்னடர் பகையை வளர்க்கும் வகையிலும் தேச ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் பா.ஜ.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.