2 வது நாளாக போராட்டம்...அமைச்சர்கள் அளித்த உறுதி...திருமாவளவன் பேட்டி!
முதலமைச்சர் நாடு திரும்பிய பின்பு ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் 2 வது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வருகின்றனர். திமுக வாக்குறுதியிலும் இடைக்கால ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து இடம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : ”இந்தியா - ஆஸ்திரேலியா நாட்டு உறவுகள் நம்பிக்கை - மரியாதையால் ஆனது" - பிரதமர் மோடி!
எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அத்துடன் மே மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில், மே மாதம் சம்பளம் வழங்கும் அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்களின் கோரிக்கையை வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் நாடு திரும்பியவுடன் பரிசீலனை செய்வார் என்று அமைச்சர்கள் உறுதியளித்திருப்பதாகவும், இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பு எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.