அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் ஓபிஎஸ் தரப்பு வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. 

அதனை தொடர்ந்து அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில் கட்சியின் அடிப்படை விதிகளின்படி பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது; கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது; உட்சபட்ச அதிகாரம் பெற்றது பொதுக்குழுதான். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என வழக்கறிஞர் வாதிட்டார். 

இதையடுத்து, இன்றைய வாதம் முடிந்த நிலையில், அந்த  மனு மீதான விசாரணை நாளைக்கு ( வெள்ளிக்கிழமை ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    | ”பட்டியலினத்தவர் என்பதால் துன்புறுத்தல்”ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்...!