மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டியானையை எழுப்ப முயன்ற தாய் யானை....காண்போரை கண்கலங்க வைத்த வீடியோ காட்சி

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டியானையை எழுப்ப முயன்ற தாய் யானை....காண்போரை கண்கலங்க வைத்த வீடியோ காட்சி

கேரளா தமிழகம் ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வலசை பாதைகளில் ஏராளமான காட்டுயானைகள் உலா வருவது வழக்கம். குறிப்பாக தமிழக கேரள எல்லையை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் ஊர் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகள் ரயிலில்  அடிபட்டு இறப்பதும், பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அனை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானை அருகில் சென்று  தன் தும்பிக்கையால் தட்டி தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தாய் யானை அங்கிருந்து சென்றை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வனகால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு பணியை மேற்கொண்டனர். உயிரிழந்த யானை குட்டியை தாய் யானை எழுப்ப முயலும் காட்சிகள் காண்போரை கண் கலங்க செய்தது.