மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு...!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு...!
Published on
Updated on
2 min read

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்ற தமிழக அரசு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஒரு மின் இணைப்பிற்கு ஒரு ஆதார் எண்ணை மட்டுமே இணைக்க முடியும் என்றும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால்,  அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு, சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது எனவும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டான்ஜெட்கோ தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, வழக்கில் அடிப்படை தகுதி இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com