பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ. 2.5 லட்சத்திற்கு விற்ற தாய்... பணம் திருடுபோனதாக நாடகமாடி சிக்கிக்கொண்டது அம்பலம்...!

சென்னை அருகே பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் தாய் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை ரூ. 2.5 லட்சத்திற்கு விற்ற தாய்... பணம் திருடுபோனதாக நாடகமாடி சிக்கிக்கொண்டது அம்பலம்...!

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின். இவர் கடந்த 27-ஆம் தேதி மதியம் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்ற போது மர்ம நபர்கள் சிலர் பணப்பையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், அன்றிரவு வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனையடுத்து தாமதமாக வந்து புகார் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் யாஸ்மினிடம் நடத்திய விசாரணையில் மோகன் என்பவருடன் 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 10 வயதில் மகள் இருப்பது தெரியவந்தது. மேலும்  இரண்டாவதாக யாஸ்மின் 5 மாத கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க திட்ட்மிட்டுள்ளார். மேலும் யாஸ்மினுக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருந்து வந்ததால் எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது  எண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெயகீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு குழந்தையை கலைக்க ஆலோசனை கேட்ட போது குழந்தையை அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்து அவர் தருவதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து கடந்த 21 ஆம் தேதி யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் 25-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனவுடன் குழந்தையுடன் புரசைவாக்கத்திற்கு கொண்டு வருமாறு ஜெயகீதா கூறியுள்ளார். அங்கிருந்த ஜெயகீதாவின் நண்பரான தனம் என்பவர் அழைத்து வந்த தம்பதியிடம்  குழந்தையை கொடுத்துவிட்டு வெற்று தாளில் கையெழுத்து போட்டு 2.5 லட்சத்தை யாஸ்மின் பெற்று சென்றதாக தெரிவித்துள்ளார்.

பணப்பையுடன் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்ற போது  மர்ம நபர்கள் சிலர் ஓட்டுனரிடம் முகவரி கேட்பது போல் பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் இதனால் வேறு வழியின்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக யாஸ்மின் தெரிவித்துள்ளார். 

அதனைதொடர்ந்து குழந்தையை விற்க உறுதுணையாக இருந்த  ஜெயகீதாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஜெயகீதா அவரது நண்பர்களான தனம், லதா, ஆரோக்கியமேரி ஆகியோர் இணைந்து குழந்தை இல்லாதவர்களுக்கு ஏழை பெண்கள் மூலமாக கருமுட்டைகளை வாங்கி விற்பதும், குழந்தைகளை விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே யாஸ்மின் கருமுட்டைகளை பணத்திற்காக அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடைத்தரகரான ஆரோக்கிய மேரியும், அதே அலுவலகத்தில்  பணிப்புரிந்து வந்த சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பல வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என தெரியவந்தது. இதனால் யாஸ்மினின் குழந்தையை அவர்களுக்கு 2.5 லட்ச ரூபாய் பேரம் பேசி விற்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து புரசைவாக்கத்தில் குழந்தையை 2.5 லட்ச ரூபாய்க்கு விற்று அதில் 1.70 லட்ச ரூபாயை யாஸ்மினுக்கு வழங்கி விட்டு கமிஷன் தொகை   80 ஆயிரத்தை ஜெயகீதா, மேரி, தனம் ஆகியோர் பிரித்து எடுத்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் பதறி ஓடி வந்த யாஸ்மின் , ஜெயகீதாவிடன்பணத்தை யாரோ திருடி சென்றதாகவும், உன்னிடம் உள்ள பணத்தை கொடு,  குழந்தையை மறுபடியும் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறி தன்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டதாகவும், ஜெயகீதா உண்மையைக் கொட்டியுள்ளார்.

பின்னர் சம்பவம் நடந்ததாக யாஸ்மின் கூறிய இடத்தில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பணம் பறிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அறிந்து, யாஸ்மினிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் உண்மை வெளிவந்தது.

ஆட்டோவில் தனது கள்ளகாதலன் சையது தஸ்தாகீர் உடன் சென்ற யாஸ்மின், அவரிடம் 1 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்து அனுப்பிவிட்டு, ஜெயகீதாவிடம் இருந்த 50 ஆயிரத்தைஒ பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து மூலக்கொத்தளத்தில் உள்ள சிவக்குமாரின் வீட்டிலிருந்த குழந்தையையும், யாஸ்மின் வீட்டிலிருந்து இரண்டரை லட்சம் பணத்தையும் மீட்ட போலீசார், யாஸ்மின், ஜெயகீதா, தனம், லதா மற்றும் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.