கடல் சீற்றத்தால் நீரில் மூழ்கிய 3000 ஏக்கர் உப்பளங்கள் - உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனை!!
விழுப்புரத்தில் கடல் சீற்றத்தால் மூன்றாயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்திலேயே உப்பு உற்பத்தி செய்வதில் மரக்காணம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன்னுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 வருட காலங்களாக கொரோனா பரவல், பருவமழை போன்றவற்றால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த இருவாரங்களுக்கு முன்னர் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக மரக்காணம் கடலில் சீற்றம் அதிகமாக ஏற்பட்டதால் முகத்துவாரம் வழியாக கடல்நீர் உட்புகுந்து 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் கடல் நீர்சூழ்ந்துள்ளது. தயார் நிலையில் இருந்த உப்பளங்கள் வீணாகிவிட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.