இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 3 தமிழக மீனவர்கள் படுகாயம்...
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் நேற்று அதிகாலை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த மீனவர்கள் மீது அரிவாள், கட்டைகள் உள்ளிட்டவைகளால் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, 2 படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, டீசல், மீன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த குப்புசாமி, நாகேந்திரன் மற்றும் காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதரன் ஆகியோருக்கு தலை, கை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் படகில் சென்ற 8 மீனவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து கரை திரும்பிய மீனவர்கள், படுகாயமடைந்த மூன்று மீனவர்களை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.