15 ஆம் தேதி முதல் ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா நிவாரணத் தொகையின் 2வது தவணைக்கான டோக்கன் ஜூன்11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 11 முதல் 14 ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 15 ஆம் தேதியில் இருந்து காலை 8 மணி முதல் 12 மணி வரை பணம் மற்றும் பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.