என்.எல்.சிக்கு எதிராக...2 நாட்கள் எழுச்சி நடைபயணம்...அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

என்.எல்.சிக்கு எதிராக...2 நாட்கள் எழுச்சி நடைபயணம்...அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்களை  காப்பதற்காகவும், என்.எல்.சியை வெளியேறுமாறும் வலியுறுத்தி நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிறுவனம்:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சியை வெளியேற்றுவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் தேவையும், கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், என்.எல்.சி நிறுவனம் அதன் முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3000-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களையும், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தப்படவுள்ளது.

இதையும் படிக்க: என்னை விட அஜித்-தான் ரொம்பவும் ஸ்வீட் - மஞ்சுவாரியர்!

முயற்சியை கைவிடாத என்.எல்.சி:

இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்களை பறிக்கவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் போதிலும் என்.எல்.சி நிறுவனம் அதன் முயற்சிகளை கைவிடவில்லை. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி தீவிரப்படுத்தி வருகிறது.

தனியாருக்கு தாரைவார்க்கப்படவுள்ள என்.எல்.சி:

இப்படி என்.எல்.சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும், ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்களை நிலக்கரி சுரங்கத்திற்காகப் பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் துடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது என்றும், தனியாருக்கு தாரை வார்க்கப்படவுள்ள என்.எல்.சி, அதற்கு முன்பாக 25,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி அதையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எழுச்சி நடைபயணம்:

எனவே, கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (ஜனவரி 7) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 8) ஆகிய இரு தினங்களில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நாளை காலை வானதிராயபுரத்தில் தொடங்கும் பிரச்சார எழுச்சி நடைபயணம், தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக் குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி வழியாக நாளை மறுநாள் ஜனவரி 8-ஆம் தேதி மாலை கரிவெட்டி கிராமத்தில் நிறைவடையும் என்பதையும் தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.