தாம்பரம் கிஸ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம்... முதல்வர் நடவடிக்கை எடுப்பார்... சேகர் பாபு
ஜமின் ஒழிப்பு சட்டத்தின் படி தாம்பரம் கிஸ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம் பாப்பாசத்திரம் காசி விஸ்வனாதர் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை சார்பாக, வருவாய் துறையிடம் உள்ள அந்த நிலத்தை கோரி பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மையத்தினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தனர். பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,
தடுப்பூசி தான் கொரோனாவை வெல்லும் பேராயுதம். இதை பேரியக்கமாக நடத்த முதல்வர் எடுத்த சீரிய முடிவால் சென்னை இந்த முயற்சி வெற்றி நடை போடுகிறது. சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி மூலம் ஒரு லட்சத்து 88,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் 2லட்சத்து 37,000 தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 4மாதங்களில் அதிகப்படியான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் செயல்பாடுகள் அமைந்துள்ளது என்றார்.
ஜமின் ஒழிப்பு சட்டத்தின் படி தாம்பரம் கிஸ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை வசம் உள்ளது. ஆனால், பாப்பாசத்திரம் காசி விஸ்வனாதர் கோவிலுக்கு சொந்தமானது என இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை சார்பாக பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்து ஒரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.