கடலூரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்...!

கடலூரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்...!

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக தனியார் பள்ளிகள் வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி போன்ற வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அந்த வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர்.

பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க     | கர்நாடகாவில் பாஜகவின் உத்தரவுகளை திருத்துவோம்...! திரும்பப் பெறுவோம்...! - பிரியங்க் கார்கே.

இந்த ஆய்வின் போது வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. 

இதில் 12 வாகனங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த குறைகள் சரி செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம்.

இந்த ஆய்வுக்கு முன்னதாக அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதையும் படிக்க     | குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!!!