இந்தியாவுக்கு  எதிரான 3வது  ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி...

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு  எதிரான 3வது  ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி...
இந்தியா-இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில்  நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.  மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.  இதன்பின், இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
 
இதன்படி,  நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.
 
மீண்டும் மழை குறுக்கிட்டதால் 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி களமிறங்கியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவிஷ்கா அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். பின்னர்  இலங்கை அணி 39 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
 
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்  முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.