கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டம், துபாயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்டி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. வெங்கடேஷ் அய்யர், திரிபாதி, நிதிஷ் ராணா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். அதன்பின் வந்த நிக்கோலஸ் பூரண் 12 ரன்னிலும், மார்கிராம் 18 ரன்னிலும், தீபக் ஹூடா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், மறுமுனையில் அரைசதம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.எல். ராகுல், 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாரூக்கான், 9 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 19 புள்ளி 3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.