பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி

ஷார்ஜாவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது.

பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன்களை குவிக்க தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா, தவான் ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, அடுத்து வந்த ஸ்டாய்னிஸ், ரிஷாப் பண்ட், ஹெட்மையர் ஆகியோர் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 46 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 55 ரன்களும் சேர்த்து, அணிக்கு பலமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், டெல்லியின் பக்கம் ஆட்டம் சாய்ந்தது. தினேஷ் கார்த்திக், மோர்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகிய நான்கு பேரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ராகுல் திரிபாதி அடித்த சிக்சர் மூலம் கொல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.