7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை கைப்பற்றிய இந்திய அணி...

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை கைப்பற்றிய இந்திய அணி...

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், மார்டின் கப்டிலும், டேரில் மிச்சேலும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

அவ்வாறு ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணி, அதிக ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தினர். நடுவரிசையில் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் மட்டும் அதிரடி காட்டி 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகிய இருவரும் அரை சதத்தை கடந்து அசத்தினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சவுதி வீசிய பந்தில் போல்ட் ஆனார். 18-வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 2 சிக்சர்கள் விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 17 புள்ளி 2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில், 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.