இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி.. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி..  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்தாண்டு  ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், நான்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2 -1 எனும் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில், கடைசி போட்டி கொரோனா பரவலால் தடைப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக புஜாரா 66 ரன்களும், ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், இங்கிலாந்திற்கு வெற்றி இலக்காக 378 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பில் 259 ரன்கள் குவித்து வலுவான நிலையில், இருந்தது.

இந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ அதிரடி காட்டினர். இருவரும் சதம் அடித்த நிலையில், 76 புள்ளி 4 ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றியடைந்தது. இதன்மூலம், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 2-2 எனும் கணக்கில், சமனில் முடிந்தது.