டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 8 பேர் தகுதி...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமிழகத்தில் இருந்து 8 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர், 5 விளையாட்டுப் பிரிவில் பங்கேற்கவுள்ளனர். வால் சண்டை பிரிவில் பங்கேற்கவுள்ள முதல் இந்தியராக, தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி திகழ்கிறார். மேலும் தமிழகத்திலிருந்து திருச்சியைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
டோக்கியோவில் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 400மீ தொடர் ஓட்டத்தில் லால்குடியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆரோக்கிய ராஜீவ், தகுதி பெற்றுள்ளார். அதேபோல் கலப்பு 400மீ தொடர் ஓட்டத்தில் திருச்சி குண்டூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர் தகுதி பெற்றுள்ளார்.
நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தகுதி பெற்றிருப்பது, பயிற்சிபெறும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமது கனவு நனவாகி இருப்பதாக வீராங்கனை தனலட்சுமி தெரிவித்துள்ளார்.மதுரையை சேர்ந்த ரேவதி டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார். 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார்.
அதேபோல் சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து கொண்டே ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக தடகள வீரர் நாகநாதன் பாண்டி-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த சிங்கம்புலியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.
அதே போல் தமிழர் சரத் கமல், நான்காவது முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க உள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த கே.சி. ஞானபதி, நீத்ரா குமணன், இளவேனில் வளரிவன், சதயன் ஞானசேகரன்,வருண் அசோக் தக்கர் உள்ளிட்டோரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர்கள் குழுவுக்கு சரத்கமல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.