தமிழக ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் ....டி.ஆர் பாலு,!

 நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் ....டி.ஆர் பாலு,!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து டி.ஆர்.பாலு, அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகள் உடன் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

நீட் தேர்வை தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார்.

ஆனால் இதுவரை ஆளுநர் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. நீட் தேர்வுக்கு முழு பொறுப்பு ஆளுநர் தான். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த 29-ந் தேதி சந்திக்க சென்றோம். ஆனால் அவரை சந்திப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது என்றார்.

மேலும் இதுநாள் வரை உள்துறை அமைச்சர் எங்களை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்றும் அமித்ஷா எங்களை சந்திக்க மறுக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசியல் காரணமாக அமித்ஷா எங்களை சந்திக்க மறுக்கிறார் என நினைக்கிறேன் அதுவாக கூட இருக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் , நீட்க்கு ஒட்டுமொத்த பொறுப்பு ஆளுநர் தான். தவறு செய்யும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழகம் வரும் பாரத பிரமரை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்க்கவில்லை. 11 மருத்துவ கல்லூரிகள் தருகிறார். நாகரிக தமிழ்நாடு அதனால் பிரதமரை வரவேற்போம் என தெரிவித்தார்.