சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்துக்கு எதிரான மனு: தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு...

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும்  தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்துக்கு எதிரான மனு: தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு...

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.அத்துடன்  சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும்  பணி நடந்து வருகிறது.

இதற்கு, பல்வேறு கல்வி வாரியங்களும், சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை சிபிஎஸ்இ எடுத்ததாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த முடிவில் தலையிட விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மற்றும் மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.