தமிழ்நாட்டில் கர்நாடக தேர்தல் எதிரொலி..... காங்கிரஸ் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்...!
கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்கட்சியான பாஜகவை பின்னுக்குத்தள்ளி, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸின் வெற்றியை வரவேற்கும் வகையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமையில் உச்சிபிள்ளையார் கோயில் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும், இதேபோல, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நகர காங்கிரஸார் சார்பில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றும், மதுரையில் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு லட்டு கொடுத்தும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
இதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகர காங்கிரஸ் தலைவர் நாதன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஒன்று கூடி பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகாத்மாகாந்தி, காமராஜர், சிலைகளுக்கு மாலைஅணிவித்தும், வெற்றி கோஷமிட்டும்,கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிக்க } "கர்நாடக தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்படும்" பசவராஜ் பொம்மை!!
இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட கட்சியினர் மாநகரத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பட்டாசுகள் வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இன்னும் பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க } 'கர்நாடக தேர்தல்' தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறதா காங்கிரஸ்?