கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா ?

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக கூறப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான லிங்காயத் மடாதிபதிகள் பெங்களூருவில் கூடியுள்ளனர்
கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா ?
Published on
Updated on
1 min read

கர்நாடக பாஜகவில் சக்திவாய்ந்த தலைவராக கருதப்படும் எடியூரப்பா, கடந்த 2019ம் ஆண்டு  முதல் அம்மாநில முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் வயதுமூப்பு காரணமாகவும், கட்சிக்குள் அவருக்கு எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்கும் வகையிலும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய, அக்கட்சித் தலைமை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சராகப் பதவியேற்று நாளையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், எடியூரப்பா ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க கூடாது என, அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே எடியூரப்பாவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்த லிங்காயத் மடாதிபதிகள், தற்போது பெங்களூரில் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெள்ள பாதிப்புகளை பார்வையிட பெலகாவி சென்றுள்ள எடியூரப்பா, இன்று இரவுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் தாம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக மாநாடுகள் நடத்துவதை கைவிட வேண்டும் என்று லிங்காயத் மடாதிபதிகளுக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com