சட்டமன்ற வளாகத்திற்கு குதிரை வண்டிகளில் வந்த காங்கிரஸ் தலைவர்கள்...

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, விதான் செளதா சட்டமன்ற வளாகத்திற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்றனர்.

சட்டமன்ற வளாகத்திற்கு குதிரை வண்டிகளில் வந்த காங்கிரஸ் தலைவர்கள்...

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் கேஸ் விலையை உயர்த்தி வருவதை கண்டித்து தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மழைகால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

மீண்டும் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என சட்டமன்றத்திற்கு சைக்கிள் மூலமாகவும் பேரணியாக காங்கிரஸ் கட்சியினர் சென்றனர். இந்நிலையில் மழைகால கூட்டத்தொடர் இன்று முடியும் நிலையில் இன்று குதிரை வண்டியில் காங்கிரஸ் தலைவர்கள் டி கே சிவகுமார், சித்தராமையா, ஹாரிஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் வரை தொடர்ந்து தங்களது ஆர்ப்பாட்டம் தொடரும் என கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். குவீன்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து சட்டமன்ற வளாகம் வரை நடந்த குதிரை வண்டி பேரணியில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்