மகளிர் இடஒதுக்கீடு மசோதா : மக்களவையில் காரசார விவாதம்..!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா :  மக்களவையில் காரசார விவாதம்..!

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவா மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாள் முழுவதுமாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து மக்களவையில் முதலாவதாக பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் சோனியாகாந்தி, மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாகவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கனவு எனவும் தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சந்தோஷத்தைக் கொடுத்தாலும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என விமர்சித்த நிலையில், அடுத்து பேசவிருந்த திமுக எம்.பி கனிமொழியையும் பேசவிடாமல் தடுத்தார்.

இதுதான் பெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் என எதிர்கட்சிகள் விமர்சித்த நிலையில், இந்தியில் பேசினால் ஒன்றும் புரியாது எனக்கூறி கனிமொழி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

பெரியார், பாரதியார் கூற்றுகளை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கிய கனிமொழி, தொகுதி மறுவரையறைக்குப் பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமல் என்ற நிபந்தனை ஏன் என கேள்வியெழுப்பினார். மக்கள்தொகை அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தினால் தென்மாநில பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு குறையும் எனவும், தொகுதிகளின் அடிப்படையில் தற்போதைய நிலையை தொடர்ந்தால் மட்டுமே உரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து தரப்பினரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் பாஜக அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து NCP எம்.பி சுப்ரியே சூலே பேசிய போது, வீட்டில் சமையல் செய்யுங்கள்-நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மகாராஷ்டிராவில் நேரலையில் நிஷிகாந்த் பேசியதை சுட்டிக்காட்டினார். தன்னை இப்படி இழிவாக விமர்சித்துவிட்டு, நாடாளுமன்றத்தில் மசோதாவை பாஜக ஆதரிப்பது ஆச்சரியமளிக்கிறது எனவும் கூறினார். 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா பேசும்போது, இது போலித்தனமான வாக்குறுதியே தவிர வரலாற்றுசிறப்பு மிக்க மசோதா அல்ல என தெரிவித்தார். மக்கள்தொகை கணக்கெடுப்பு, எல்லை நிர்ணயம் என சிக்கலான இரு காரணிகளைக் கொண்டுள்ள இம்மசோதா, 2029ம் ஆண்டில் கூட அமலுக்கு வராது எனவும் அவர் ஆவேசத்துடன் விமர்சித்தார்.

மக்களவையில் மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய ராகுல்காந்தி, மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை இன்றே வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். மத்திய அரசின் நிர்வாகத்தின் 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனக்கூறிய அவர், ஓபிசி இடஒதுக்கீடு இல்லாமல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமைபெறாது எனவும் குற்றம்சாட்டினார். அப்போது பாஜக எம்.பிக்கள் இடைமறித்து அமளியில் ஈடுபடவே, உண்மையைக் கண்டு அஞ்ச வேண்டாம் எனக்கூறி ராகுல்காந்தி பேச்சைத் தொடர்ந்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களவை கணக்கெடுப்பு தேவையில்லை எனவும் சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக அரசு புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார். பளபளப்பான இந்த புதிய நாடாளுமன்றத்தில், நாட்டின் முதல் குடிமகனான பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவரை பார்க்க முடியவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

இதையடுத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் அரசியல் விவகாரமாகவே அணுகுகின்றனர் என குறிப்பிட்டார். நீண்ட காலத்திற்கு பிறகு மகளிருக்கு நீதி கிடைத்துள்ளது எனவும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவின் நீண்ட பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஒரு ஓ.பி.சி பிரதமரைக் கூட காங்கிரஸ் அளித்ததில்லை எனக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவி வகித்துள்ளார் எனவும் தெரிவித்து ராகுல்காந்தி கருத்துக்கு பதிலடி கொடுத்தார். இவ்வாறு காரசார விவாதங்களுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவுபெற்றது.

இதனையடுத்து மக்களவையில் 33 சதவீத பெண்களுக்கு இடமளிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். இந்நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  | மகளிர் இட ஒதுக்கீடு மசோதா; கனிமொழியை பேசவிடாத பாஜக எம்.பி.கள்; கட்டுப்படுத்தாத சபாநாயகர்!