கேரளாவில் புதிய நிபந்தனை... சந்தை, வங்கிக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்...

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஒரு தடவை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே கடைகள், சந்தைகள், வங்கி உள்பட பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று அரசு புதிய நிபந்தனையை விதித்து உள்ளது. 

கேரளாவில் புதிய நிபந்தனை... சந்தை, வங்கிக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம்...

கேரளாவில் கடந்த 11 நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி உள்ளது. நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 414 பேருக்கு தொற்று உறுதியானது. நோய் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து முழு ஊரடங்கை கடுமையாக்க அரசு தீர்மானித்து உள்ளது.

ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், கடைகளுக்கு செல்வோருக்கு நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.  அதன்படி கடைகள், சந்தைகள், வங்கிகள், நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு செல்பவர்களும், பணி புரிபவர்களும் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாவது முதல் டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா வந்து குணமடைந்தவராகவோ இருக்க வேண்டும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் இடங்களை தவிர மற்ற பகுதிகளில் திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்கலாம் எனவும்  ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.