உ.பி. அமைச்சரவையில் யார் யாரை நியமிப்பது?.. பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் ஆலோசனை!!
உத்தரப் பிரதேச அமைச்சரவையில் யார் யாரை நியமிப்பது குறித்து பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தி உள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவில், பஞ்சாபை தவிரம் மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி 260க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக இருந்து வரும் யோகி ஆதித்யநாத் தலைநகர் டெல்லி சென்றார். பின்னர் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கான அமைச்சரவையில் யார் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் உடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வார் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.