மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தராது.! உறுதி அளித்துள்ளதாக துரைமுருகன் பேச்சு.! 

மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தராது.! உறுதி அளித்துள்ளதாக துரைமுருகன் பேச்சு.! 

மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தராது என ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்திருப்பதாக, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்திடம் தெரிவிக்காமல் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையையும் கர்நாடகா கட்டியுள்ளது. மேலும், மேகதாதுவில் அணைகட்டுவதை தமிழக அரசு எதிர்க்க கூடாது என சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.  

இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. 

இந்தச் சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தராது என உறுதிபடத் தெரிவித்துள்ளதாகக் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்திருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.மேலும் தாம் இங்கு வந்துள்ளதை அறிந்து, கர்நாடக சார்பிலும் சிலர் வந்திருப்பதாகவும், அவர்களும் ஒன்றிய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.