தீவிரவாதிகள் என சந்தேகித்து 14 அப்பாவி மக்களை சுட்டுகொன்ற ராணுவம்: நாகலாந்தில் பதற்றம்...

நாகலாந்தில் ராணுவம்  நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள்   14  பேர் கொல்லப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில்  பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என அ்மமாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தீவிரவாதிகள் என சந்தேகித்து 14 அப்பாவி மக்களை சுட்டுகொன்ற ராணுவம்:  நாகலாந்தில் பதற்றம்...

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு  என்ற கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் உயரிழந்தனர். இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதால்  பெரும் கலவரம் வெடித்துள்ளது. வாகனங்கள் தீ  வைத்து எரிக்கப்பட்டதால்  பெரும்  பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகலாந்து முதல் மந்திரி நைபியு ரியோ, மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போது அங்கு நிலமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த சம்பவத்தை கேள்வி பட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.