பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் : நீதிமன்றம் கருத்து

இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் : நீதிமன்றம் கருத்து

உத்தரபிரதேசத்தில் பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட கைஜாவேத் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் விசாரணையை தொடங்கிய நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். 

மேலும்,பசு பாதுகாப்பு பணி ஒரு மதத்தின் பணி மட்டுமல்ல, பசு இந்தியாவின் கலாச்சாரமாகும், மதத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பணி இதுவாகும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

அரசு கோசாலைகளை கட்டுகிறது, ஆனால் பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை. அதுபோலவே தனியார் கோசாலைகளும் இன்று வெறும் போலித்தனமாக மாறிவிட்டன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் தங்கள் சொந்த நலனுக்காக செலவிடுகிறார்கள் தவிர பசுவை கவனித்துக்கொள்வதில்லை என தெரிவித்திருக்கிறது. மேலும் பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.