ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி.. நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது - சிபிஐ அதிரடி

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்து மும்பை அழைத்து வந்துள்ளனர்.

ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி.. நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது  - சிபிஐ அதிரடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று, மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச்சென்றார்.

அதன்பின்னர் இந்தியாவின் வேண்டுகோள் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அதுதொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த  உத்தரவிட்டது.

ஆனால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நீரவ் மோடி தரப்பு வழக்கறிஞர், அவர்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரவ் மோடியை மும்பை சிறையில் அடைத்தால் தற்கொலை செய்யக்கூடும் எனவும் எச்சரித்தார்.

இந்தநிலையில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த  நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை சிபிஐ அதிரடியாக கைது செய்து மும்பை அழைத்து வந்துள்ளது. இவர் நீரவ் மோடியின் நிறுவனம் ஒன்றில் உதவி பொது மேலாளராக பணியாற்றிய நிலையில், அவரிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளனர்.