மகளிர் இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினரை பிரதமர் புறக்கணிப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி!

மகளிர் இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினரை பிரதமர் புறக்கணிப்பது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, 2010ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு 100 சதவீதம் வருந்துவதாகக் கூறினார். மக்கள்தொகை கணக்கெடுப்பு, எல்லை நிர்ணயம் முடிந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலுக்கு வரும் என யாருக்கும் தெரியாது எனவும் எந்த சிக்கலுமின்றி பாஜக அரசால் இன்றே இடஒதுக்கீட்டை வழங்க முடியும் எனவும் அவர் விமர்சித்தார்.

மசோதாவை இன்று பேசுபொருளாக்கி, 10 ஆண்டுகளுக்குப்பின் அமல்படுத்துவதன் மூலம் மகளிரை பாஜக அரசு அவமதிப்பதாக கூறிய அவர், மக்களை திசைத் திருப்புவதற்கான ஒரு தந்திரமே இந்த 33 சதவீத இடஒதுக்கீடு எனவும் ராகுல்காந்தி விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசி அவர், இந்திய செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓ.பி. சி பிரிவினர் என குற்றம்சாட்டிய அவர், நாள்தோறும் ஓ.பி.சி பற்றி பேசும் பிரதமர் அவர்களுக்காக என்ன செய்தார் எனவும் கேள்வியெழுப்பினார்.

மகளிர் இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினரை பிரதமர் புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி சாதிவாரி கண்கெடுப்புடன் சேர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2024ம் ஆண்டு தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: சென்னையை பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது!