பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்..!

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்..!

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் தனது முதல் மனைவியைவிவாகரத்து செய்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நாளை இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரான பக்வந்த் மான், கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன முதல்வர் பக்வந்த் மான் நாளை இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். 

48 வயதாகும் முதல்வர் பக்வந்த் மானின், முன்னாள் மனைவியின் பெயர் இந்தர்ப்ரீத் கவுர். இந்த தம்பதிக்கு தில்ஷன் மான் என்ற மகனும் சீரத் கவுர் மான் என்ற மகளும் உள்ளனர். 2015இல் மான்-இந்தர்ப்ரீத் தம்பதி ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்தனர். அதற்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை. அந்த காலகட்டத்தில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவரின் முதல் மனைவி தனது பிள்ளைகளோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இருப்பினும் பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்ற போது அவருடைய பிள்ளைகள் இருவரும் விழாவுக்கு வந்து கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பக்வந்த் மான், குர்பிரீத் கவுர் என்ற மருத்துவம் படித்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த திருமணம் சண்டிகரில் உள்ள அரசு இல்லத்தில் நாளை எளிய முறையில் நடக்கவுள்ளது. திருமணத்திற்கு   டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளருமான  அர்விந்த் கெஜ்ரிவால்  சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், அவரின் தலைமையில் பக்வந்த் மான் நாளை இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள போகிறார். அதுமட்டுமில்லாமல் இவரின் திருமணத்தில் அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் பங்கேற்க இருக்கின்றனர்.  அத்துடன் திருமணத்தையொட்டி முக்கிய பிரமுகர்கள் விழாவிற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.