தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா பரவல் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா 2-வது அலை பரவலுக்கு பின் மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து, இயல்பு நிலை திரும்பி நிலையில், தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை உயரத்தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது 3-வது அலைக்கான எச்சரிக்கையையும் நிபுணர்கள் விடுத்து வருவதால், அதற்கான தயார் நிலை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து பிரதமர் மோடி மாநிலங்கள் வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த 13-ம் தேதி பிரதமர் மோடி வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த 7 முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார். மேலும் மலைபிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனையை தொடங்கியுள்ளார். தமிழகம் சார்பில் தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கூட்டத்தில், மாநிலங்கள் வாரியாக கொரோனா நிலவரங்களை கேட்டறிவதோடு, பிரதமர் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.