இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்புமிக்க முதல் ஜோதி ஓட்டத்தை டெல்லியில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, அடுத்த மாதம் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.1927-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசு நடத்தும் இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி, ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று சுடர் தொடர் ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 

அதன்படி, செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்புமிக்க முதல் சுடர் ஓட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்திராகாந்தி மைதானத்தில் மாலை 5 மணியளவில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கிறார். அதை அவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைப்பார். டெல்லியில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வந்து, அடுத்த மாதம் 27-ஆம் தேதி போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தை வந்தடையவுள்ளது.