மணிப்பூர், திரிபுரா மாநிலங்களுக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி 

மணிப்பூர் மாநிலத்தில் சுகாதாரம், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார்.

மணிப்பூர், திரிபுரா மாநிலங்களுக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி 

பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 11 மணியளவில், மணிப்பூர் இம்பாலில் நான்காயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான 13 திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், இரண்டாயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

சாலை கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டங்கள் அடங்கும். இதைத் தொடர்ந்து ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாயிரத்து 350-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களையும் பிரதமர் மோடி, மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், பிற்பகல் 2 மணியளவில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில், மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.