ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு
ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், அரபிக்கடலில் விழுந்த விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.
ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர், 2 விமானிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் அரபிக்கடலின் மேல் பறந்து கொண்டிருந்தது. அப்போது அவசரமாக தரையிறங்க முயன்றபோது, திடீரென ஹெலிகாப்டர் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மும்பைக்கு மேற்கே உள்ள சாகர் கிரண் எனும் எண்ணெய் கிணறு பகுதியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் விபத்து நடந்த நிலையில், விபத்துக்குள்ளானவர்கள் உடனடியாக படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். நானாவதி மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், நான்கு பேர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒ.என்.ஜி.சி. நிறுவன பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர் ஒருவரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.