மாறி வரும் உலக சூழலில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் - பாஜகவின் 42வது நிறுவன தினத்தில் பிரதமர் பேச்சு
மாறி வரும் உலக சூழலில், இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 42வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொடியேற்றத்துக்கு பின்னர் காணொளி வாயிலாக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான அனைத்து மக்களுக்காகவும் பாஜக தொடர்ந்து பாடுபடும் என்றார்.
மேலும் புதிதாக 4 மாநிலங்களில் வெற்றிப்பெற்றதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் பாஜக எம்.பிக்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டிருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய அவர், குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளதாக குறை கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவை தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் இந்தியா, தேசிய நலனை முன்வைத்து சுதந்திரமாக தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளதாக கூறினார்.