முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்... தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
முல்லைப்பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கோரி கேரளாவை சேர்ந்த "பெரியாறு பாதுகாப்பு இயக்கம்" சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அணையின் இயக்கத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, எவ்வித பரிசீலனையும் இன்றி நிராகரிக்க வேண்டும் எனவும், அணை அனைத்து விதத்திலும் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
பெரியாறு பாதுகாப்பு இயக்ககோரிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும், புதிய அணை கட்ட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அணையின் நீர்தேக்கம் மத்திய நீர்வள ஆணையத்தின் "அணை இயக்கமுறை விதிகளின் படியே" கடைபிடிக்கப்படுவதாகவும், முல்லை பெரியாறு அணியில் பாசன வசதி பெறும் வேளாண் நிலங்களின் தரவு விவரங்கள் ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் அதிகார குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை இயக்க விதிகளை மீறியதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1886 ஆம் ஆண்டு போடப்பட்ட முல்லை பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கபட்ட விசயம் என்பதால் அதை கருத்தில் கொள்ள தேவையில்லை என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.