ஓய்வு பெறபோகிறாரா முகேஷ் அம்பானி? ராஜியத்தின் அடுத்த வாரிசு யார்?
பிரபல ரிலயன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் தலைவராக ஈஷா அம்பானியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி ஓய்வு பெற இருக்கிறாரா என்ற கேள்விகள் கிளம்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில், இந்தியர்களில் முன்னணி வகிப்பவர் தான், ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று நடந்த இந்த இந்த நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தனது மகள் ஈஷாவை, ரிலயன்ஸ் ரீடெயிலின் தலைவராக அறிமுகப்படுத்தினார். மேலும், தனது அடுத்த வாரிசு பற்றியும் பேசியிருக்கிறார் முகேஷ். இதனால், அவர் ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வி அனைவரிடமும் தோன்றியுள்ளது.
ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-டின் 45வது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், தனது நிறுவனம் குறித்து பல திட்டங்களை அவர் கூறினார். அப்போது, தனது நிறுவனத்தை வாட்சாப்புடன் இணைத்து, தொழில்நுட்பத்தை வியாபாரத்திற்கு பயன்படுத்தும் யுத்தி குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
உடனே, மேடைக்கு, தனது மகள் ஈஷாவை அழைத்த முகேஷ், “ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான எதிர்காலம் அமையும் இந்த நேரத்தில், இளமையான, ஆற்றல் மிக்க மற்றும் சிறந்த தரத்திலான திறமைகளைக் கொண்ட எங்களின் மிகப்பெரிய இளைஞர்கள் கூட்டமே எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. எங்களது அடுத்த தலைமுறைத் தலைவர்கள் நம்பிக்கையுடன் தொழில்கள் முழுவதையும் தாங்கிப் பிடிக்கிறார்கள்.” என கூறினார். இதனைத் தொடர்ந்து, தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாட்சாப் பேமண்டுகளை, ரிலயன்சிற்கு சாதகமாக எப்படி உபயோகிக்கலாம் என ஒரு பிரசெண்டேஷனை வழங்கினார்.
30 வயதான ஈஷா, ஆனந்த் பிரமல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது இரட்டை சகோதரரான, ஆகாஷ் அம்பானி சமீபத்தில் தான் ஜியோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈஷா, ரிலயன்ஸ் ரீடெயிலின் தலைமை பொறுப்பைப் பெற இருப்பதாக முகேஷ் கூறியது, பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
டிஜிடலுக்கு ஜியோ, ரீடெயிலுக்கு ரிலயன்ஸ் லிமிடெட் மற்றும் எண்ணெய் சுத்தீகரிப்பு மற்றும் பார்மசூட்டிகள்ஸ் என மூன்று பெரிய தொழில்களை நடத்தி வரும் அம்பானி குழுமத்தின் இரண்டு வாரிசுகள், இரண்டு பெரும் நிறுவனங்களான ஜியோ மற்றும் ரீடெயிலைப் பெற்ற நிலையில், அம்பானி விரைவில் ஓய்வு பெறப்போகிறாரா என தொழில்துறை வட்டாரத்தில் ஒரு கேள்வி கிளம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி, ரிலயன்சின் மூலத் தொழிலான O2C எனப்படும் எண்ணெயை ரசாயனமாக மாற்றும் வியாபாரத்தை 26 வயதான முகேஷ் அம்பானியின் சிறிய மகன் அனந்த் என்பவருக்கு வழங்கி இருப்பதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும், இந்நிறுவனம் முதலானது மட்டுமின்றி தற்போது தலையோங்கி நிற்கும் நிறுவனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, ரிலயன்ஸ் நிறுவனமானது நல்ல கரங்களில் தான் ஒப்படைக்கப்படுகின்றன என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் முகேஷ். சமீபத்தில் கூட அவரது துபாய் வீடு குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, தனது ஓய்வை அந்த மாட மாளைகையில் கழிக்கப்போகிறாரோ என்ற கேள்வியும் அனைவரிடமும் வந்துள்ளது.