மாப்பிள்ளைக்கு 365 வகைகளில் மெகா பொங்கல் விருந்து! திக்குமுக்காடி போன மணமக்கள்!

பேத்திக்கு விருந்து வைத்து அசத்திய தாத்தா, பாட்டி...

மாப்பிள்ளைக்கு 365 வகைகளில் மெகா பொங்கல் விருந்து! திக்குமுக்காடி போன மணமக்கள்!

இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆந்திராவில் தனது பேத்தியின் வருங்கால கணவருக்கு தாத்தா பாட்டி இணைந்து மெகா பொங்கல் விருந்து வைத்து மணமக்களை திக்குமுக்காட வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் வசித்து வருபவர்  வெங்கடேஸ்வர ராவ் - மாதவி தம்பதி. இவர்களுக்கு குந்தவி என்ற ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில் கடந்த மாதம் குந்தவியின் பெற்றோர் தும்மலப்பள்ளியில் வசித்து வரும் சாய் கிருஷ்ணா என்பவருடன் குந்தவிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் வருகின்ற பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளதால், தற்போது பொங்கல் பண்டிகை காரணமாக குந்தவியின் தாத்தா கோவிந்த் மற்றும் பாட்டி நாகமணி இருவரும் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணாவிற்கு விருந்து அளிப்பதற்கு முடிவு செய்தனர். 

இந்த விருந்தில் மாப்பிள்ளையை அசத்தும் வகையில் விதவிதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யத் தொடங்கினர். பின்னர் குந்தவி மற்றும் சாய் கிருஷ்ணாவை தங்களது வீட்டிற்கு வரவழைத்து அட்டகாசமான விருந்து ஒன்றை அளித்தனர்.

அதில் 100 வகையான இனிப்புகள், 30 வகையான காய்கறிகள், 30 வகையான முறுக்கு, எள் அடை, சீடை மற்றும் பழங்கள் என 365 வகையான உணவுகள் தயார் செய்து விருந்தில் வைக்கப்பட்டது. இதைக்கண்ட மணமக்கள் வாய் அடைத்து திக்குமுக்காடி போனார்கள். இதற்கிடையில் அவர்கள் அளித்த இந்த மெகா விருந்து அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

மேலும் அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த விருந்தை நேரில் வந்து கண்டு களித்து தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.