திருமண உறவில் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கு உரிமை இல்லை - கணவனுக்கு எதிராக  மனைவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து!!

பாலியல் வன்கொடுமை செய்த கணவனுக்கு எதிராக  மனைவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு பரபரப்பு கருத்தினை தெரிவித்துள்ளது.

திருமண உறவில் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கு உரிமை இல்லை -  கணவனுக்கு எதிராக  மனைவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து!!

இந்தியாவில் மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனது கணவர் மீது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள சிறப்பு சலுகை மூலம் எந்தவித தண்டனைகளும் இல்லாமல் தப்பித்து விடுகின்றனர். மேலும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375-ல் ஆண் தனது மனைவியுடன் கட்டாய உடல் உறவில் ஈடுபட்டாலும் அந்த பெண்ணின் வயது 15-க்கு மேல் இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும்படியும் கீழமை கோர்டில் வழக்குத்தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. 

மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி நாகபிரசன்னா, ஆண் ஆண் தான், சட்டம் சட்டம் தான், பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை தான். கணவனாக ஆண் மனைவியான பெண் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அது பாலியல் வன்கொடுமை தான். பாலியல் வன்கொடுமையில் ஆணுக்கு தண்டனை உண்டு என்றால், அந்த ஆண் கணவனாக இருந்தாலும் சரி’ என்றார்.

பெண் மீது மிருகத்தனமான கொடூரத்தை கட்டவிழ்த்து விட ஆண்களுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளோ, உரிமமோ திருமண அமைப்பு வழங்காது, வழங்கவில்லை, வழங்கவும் கூடாது’ என்று அதிரடியாக கூறியுள்ளார்.