சீனர்களுக்கு விசா பெற்றுத்தர உதவிய வழக்கில் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு !
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக தொடரப்பட்ட புகாரின் பேரில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 1980 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் ஆலை தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்காக அந்த நிறுவனத்துக்கு கூடுதலாக சீனாவில் இருந்து பணியாளர்கள் தேவைப்பட்டது.
இதற்காக அந்த நிறுவனம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை நாடியுள்ளனர். அவரும் சீனாவில் இருந்து வரும் 50 பணியாளர்களுக்கு விரைந்து விசா பெற்றுத்தர உதவியதாகவும், அதற்காக 50 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் இன்று டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட ப.சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
டெல்லி சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்கிளல் நீடித்த சோதனை முடிவடைந்தது. டெல்லியில் சோதனை முடிவடைந்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டபோது அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
இதனிடையே கார்த்திக் சிதம்பரம் தனியார் நிறுவனம் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது